Tamil Islamic Media ::: PRINT
வ.உ.சி க்கு 10 லட்சம் ரூபாய்க்கு கப்பல் வாங்கி கொடுத்த பக்கீர் முஹம்மதுவை தெரியுமா?

வ.உ.சி. க்கு கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

கப்பலோட்டிய தமிழன் யார்?
அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாரதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான்.

ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?


கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியை இன்றைய பாடப்புத்தகங்களில் தெரிந்து கொண்ட நம்முடையப் பிள்ளைகளுக்கு வ. உ.சி ஓட்டியக் கப்பலை விலைக்கு வாங்கிக் கொடுத்து அந்நியர்களின் மத்தியில் இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.


இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.10 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார்.


கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர்.
கப்பலை ஓட்டிய மாலுமியின் வாரிசுகள் ஐ.ஏ.எஸ் ஆகவும், ஐ.பி.எஸ் ஆகவும் முடியுமாம் ?


கப்பலை வாங்கிக் கொடுத்த வள்ளலின் வாரிசுகள் பாலர் பள்ளிக்குக் கூட செல்ல முடியாமல், ஒருவேளை உணவைப் பெறமுடியாமல், இரண்டு ஆடைகளைப் பெறமுடியாமல் வறுமைக் கோட்டிற்கு கீழ் ப்ளாட்பாரத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாம் ? என்னே நீதி ???


வ.உ.சி – யின் நேசர் உத்தமபாளையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் உள்ள ஓர் அழகிய கிராமம் கோமபை. மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் கோம்பை எனப்பெயர் பெற்றது. இயற்கையின் அடிவாரமாக மட்டுமல்லாமல், தேசிய விடுதலை எழுச்சியின் அடிநாதமாகவும் இவ்வூர் திகழந்திருந்தது.

வ.உ.சி யைப் பற்றிப்பேசும் போதெல்லாம் உச்சரிக்கப்பட வேண்டிய பெயருக்குச் சொந்தக்காரர் இவ்வூரில் வாழ்ந்த உ.ம.சே முஹைதீன் பிள்ளை சாஹிப். வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச்செட்டியா, மகாகவி சுப்பிரமண்ய பாரதி போன்ற சுதந்திரப் போராளிகளின் உற்ற நண்பராக விளங்கியவர்.

1905 – இல் சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக பங்குதாரர்களைச் சேர்க்க வந்த வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரை செட்டியா ஆகியோரைத் தனது இல்லத்தில் பல நாட்கள் தங்க வைத்து உபசரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனி பங்குகளைத் தான் வாங்கியதோடு உத்தமபாளையம், கம்பம், சுற்றுவட்டாரங்களில் வாழ்ந்த தனவந்தர்கள் பலரைப் பங்குதாரர்களாக்கிக் கொடுத்தார்.

1907 – இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா, சர்க்கரைச் செட்டியார் ஆகியோரைத் தன் சொந்ச் செலவில் அழைத்துச் சென்றார்.

1908 – இல் பிரிட்டீஷ் அரசு தனது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது.தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினர். வ.உ.சி., சுப்பிமண்ய சிவாவோடு தலைமறைவுக்கு பாதுகாப்பு தேடி முஹைதீன் பிள்ளையை நாடி வந்த போதுதான் கைது செய்யப்பட்டு கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சிறையில்தான் அவர் செக்கிழுத்த கொடுமை நடைபெற்றது. இந்த வெஞ்சிறைக் கொடுமையைக் கேள்விப்பட்ட பாரதியார், மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்நூலோர்கள் சேக்கடியில் நோவுவதும் காண்கிலேயோ! – என்ற பாடல் வரிகளை முஹைதீன் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில் தீட்டி தன் வருத்தத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

1908 – இல் வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லையில் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஏகாதிபத்தியத்தின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு பலியான பலரில்… முதல் நபர் முகம்மது யாசின் என்ற இளைஞராவார். – தனது ‘சுயசரிதை’ யில் வ.உ.சி.


வ.உ.சி. விடுதலையான பின் முஹைதீன் பிள்ளையின் இல்லத்தில் பலமுறை வந்து தங்கியுள்ளார். அப்போதுதான் அவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். அந்த நூலை உத்தமபாளையம் ஆனந்தா அச்சுக் கூடத்தில் பதிப்பித்துக் கொடுத்தவர் உத்தமபாளையம் கே.எம்.அகமது மீரான். முஹைதீன் பிள்ளை, அஹமது மீரான் ஆகியோர் செய்த உதவிகளுக்காக வ.உ.சி அவர்களக்கு எழுதிய கடிதங்கள் பல. (* மதிநா, டிசம்பர் 1986., ஜனவரி 1987)

சுதேசி ஸ்டீம் நேவிகேசன்இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேசன்’ – என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 – இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவர் ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட் ஆவார்.
இவரை புகழ்ந்து வ. உ. சி. ஒரு பாடல் பாடியுள்ளார்.


” பாக்கியமிகுந்த பக்கிரி முஹம்மதை வாக்கின் வலியால் வசப்படச் செய்தியான் வணிகர் பலரையும் வருத்தி அவனிளம் துணிவோடு சுதேசிய நாவாய்ச் சங்க நன்மலர் கண்டேன்”
என்று பாடிவிட்டு கப்பல் கம்பெனிக்குத் துணிவுடன் முதலில் பொருள் தந்தது பிரபல முஸ்லிம் வியாபாரி பக்கீர் முஹம்மது இராவுத்தர் தான் என்று அடிக்குறிப்பாக கூறியுள்ளார். (ஆதாரம் வ. உ. சி. சுயசரிதை பக் :4950)


பக்கீர் முகம்மது ரூபாய் இரண்டு வட்சம் மதிப்புள்ள 8000 பங்குகளை அவர் தனது கம்பெனி சார்பாக வாங்கினார். அதிக பங்குகளை வாங்கிய காரணத்தினால் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


இதனை பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த கம்பெனியின் பிரசிடென்ட் மிஸ்டர் பாண்டித்தேவர் (பாலவனந்தம் ஜமீன்தார்), மெஸர்ஸ் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட் கம்பெனியாரே செக்ரடெரிகள், அஸிஸ்டெண்ட் செக்ரடெரியாக தூத்துக்குடி வக்கீல் மிஸ்டர் சிதம்பரம் பிள்ளை நியமிக்கப்பட்டிருக்கிறார். – என்று 20-10-1906 – இல் எழுதியதை சீனிவிஸ்வநாதன் தனது ‘சுதேசியத்தின் வெற்றி’ நூலில் எடுத்தாண்டுள்ளார்.

இந்த செய்தியை எந்த வரலாறு புத்தகத்திலாவது பதிவு செய்துள்ளர்களா ?
*இவ்வாறு வ.உ.சியின் இமாலய முயற்சிக்கு அடித்தாங்கல்களாக பல முஸ்லிம் பெருமக்கள் இருந்துள்ளனர். வ.உ.சியின் முயற்சியை – தியாகத்தை மதிக்கும் நம் ஆதங்கமெல்லாம், கப்பல் ஓட்டிய தமிழனின் புகழைப் பேசும் போதெல்லாம் ஹாஜி. பக்கீர் முகம்மது சேட்டையும் கொஞ்சம் சேர்த்துப் பேசுங்களேன் என்பதுதான். (* செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்,பக்கம் 78.)

இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்… ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!





The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.