Tamil Islamic Media ::: PRINT
ஆட்சியை நாம் தேடவேண்டுமா? அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா? (பாகம் ½)

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வலம் வரும் ஒரு செய்தி., ஒரு மாற்று மத சகோதரர் எழுதியிருப்பதாக.. அதன் சாரம்சம் முஸ்லீம்கள் ஆட்சிக்கு வருவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், அவ்வாறு முஸ்லீம்கள் ஆட்சிக்கு வந்தால் நல்லாட்சி கிடைக்கும் எனவும் எழுதியிருந்தார்., கலிபா உமர் (ரலி) அவர்களின் செயல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார். வழக்கம் போல் நம்மவர்களும் forward >> forward >>>> forward….

தேர்தல் நேரத்தில் வழக்கம்போல் ஆளாளுக்கு கூட்டணி, சீட்டுகள் பேரம் etc.. முஸ்லீம் கட்சிகளும் இயக்கங்களும் இதில் விதி விலக்கல்ல

ஒரு அலுவலகத்தில் பணி புரிவதாக இருந்தால் புரமோஷன் வேண்டுமென்றால் முதலில் அதற்குறிய தகுதிகள் இருக்கின்றனவா என கவனிக்கப்படுகின்றன. நம்மை சற்றே சுய ஆய்வு செய்வோம். ஆட்சியை பிடிப்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆட்சி செய்வதற்கான தகுதி நம்மிடையே இருக்கின்றதா என முதலில் பார்ப்போம்.
கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நம்மால் கொடுக்க முடியுமா? நிச்சயமாக கொடுக்க முடியாது. அதை நம்பி மற்றவர்கள் ஆட்சியை இப்போது நம்மிடையே ஒப்படைத்தால் அவர்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.

தலைவரின் தகுதி:
முதலில் ஒன்றை நாம் ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சியை தேடிப்போகவில்லை. ஆட்சி அவரைத் தேடி வந்தது. ஆட்சி வந்ததினால் உமர் (ரலி) அவர்களின் தகுதி மாறவில்லை. உமர் (ரலி) அவர்களுக்கு தகுதியிருந்ததால் ஆட்சி அவர்களைத் தேடி வந்தது. உலக வரலாற்றில் ஈடு இணையற்ற ஆட்சிக்கு உமர்(ரலி) அவர்களின் குணங்களும், தகுதிகளும் மட்டும் தான் கரணமா?

குடிமக்களின் தகுதி:
அந்த ஆட்சிகாலத்திலிருந்து வெகு தூரத்திலில்லை, அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலம். அலி (ரலி) ஆட்சி காலத்தில் அவரிடம் ஒருவர் கூறினார். ஏன் உங்கள் ஆட்சி காலத்தில் இத்தனை குழப்பங்கள். முஸ்லீம்களுக்குள்ளேயே போர்கள். உமர் (ரலி) அவர்கள் காலத்தில் எவ்வளவு அழகாக நிலைமை இருந்தது என்று. அறிவின் தலைவாசல் அலி (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு என்னைப் போன்றவர்கள் குடிமக்களாக இருந்தார்கள். எனக்கு உன்னைப் போன்றவர்கள் குடிமக்களாக இருக்கின்றீர்கள்.

வரலாற்றில் உன்னதமான நல்லாட்சி புரிந்த மாமன்னர்களில் ஒருவர் ஹாருன் ரஷீத் அவர்கள். அவரிடமே ஒருவர் குறை கூறினார் உங்கள் ஆட்சி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி போன்றில்லையே என்று … அமைதியாக கூறினார் ஹாரூன் ரஷீத்…. உமர் (ரலி) அவர்களின் குடிமக்களாக, அபூஹுரைரா (ரலி), அபு உபைதா(ரலி) போன்றவர்கள் இருந்தார்கள். முதலில் அவர்களில் ஒருவராக நீ மாறிவிடு, பின்னர் நான் உமரைப் போன்று ஆட்சியைத் தருகிறேன் என்று.

கடைத்தெருவில் நடப்பதை கவனித்து வந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சட்டம் ஒன்றைப் போட்டார்கள். வியாபரம் பற்றிய மார்க்கச் சட்டங்களை தெரியாதவர்கள் இங்கே வியாபரம் செய்யக்கூடாது என்று… நம்மைச் சோதிப்பொம்.. நமது வியாபாரிகள் எத்தனை பேர் இப்போது மார்க்கச் சட்டங்களை அறிந்து வியாபரம் செய்கிறார்கள்.?

ஆலோசகர்களின் தகுதி:
தலைவர் மட்டும் (அதற்கே தட்டுப்பாடு) நல்லவராக இருந்தால் போதாது, அவரைச் சுற்றியுள்ளவர்களும் நல்லவர்களாக, வல்லவர்களாக இருக்கவேண்டும்.

ஒரு தடவை இரவில் நகரவலத்தில் போது ஒரு விபச்சாரச் செயல் நடப்பதை கலீஃபா உமர்(ரலி) நேரடியாக காண்கிறார்கள். மறு நாள் ஆலோசனை கூட்டத்தில் அதற்கான தண்டனைகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். விபச்சாரத்திற்கான நேரடி சாட்சி தீர்ப்பு சொல்லவேண்டிய கலீஃபா. மற்றவர்கள் எந்த வழக்கை கொண்டு வந்தாலும் சாட்சிகளை விசாரித்து அதன் அடிப்படையில் தீர்ப்பு கொடுக்கும் கலீஃபா அவர்களே இங்கு சாட்சி.. அவையில் இருந்த அறிவின் தலைவாசல் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மார்க்கச் சட்டப்படி விபச்சாரத்திற்கு இரண்டு சாட்சிகள் வேண்டும். கலீஃபா அவர்கள் கூறுகிறார்கள் ஆனால் இங்கே தீர்ப்பளிக்க வேண்டிய நானல்லவா நேரடியாக பார்த்திருக்கின்றேன் என்று, அலீ(ரலி) அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள் தேவை இரண்டு சாட்சிகள் இல்லையெனில் உமர் (ரலி) அவர்களே உங்கள் மீது அவதூறு கூறியதற்கான குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனை கொடுக்கப்படும்…. நம்மைச் சோதிப்போம்.. நம்மில் எத்தனை பேருக்கு இத்தகைய ஆலோசகர்களாக இருப்பதற்கு தகுதியிருக்கின்றது..

சற்றே நெருங்கி வருவோம், முகலாயர்களின் ஆட்சி காலம்.

ராஜபுத்திர இளைஞன் ஒருவன் பாபரின் மீது அடங்காத கோபம் கொண்டு அவரை சமயம் பார்த்து கொலை செய்வதற்க கத்தியுடன் டெல்லியில் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு நாள் கடைத்தெருவில் அவன் நடந்து கொண்டிருக்கும் போது திடிரென மக்கள் கலோபரமாக அலறிக் கொண்டு அங்குமிங்கும் ஓடுகிறார்கள் என்னவென்று பார்த்தால் மதம் பிடித்த யானை ஒன்று வெறியுடன் பிளறிக் கொண்டு ஒடி வந்துக் கொண்டிருந்தது, மக்கள் அது வரும் பாதையை விட்டு விலகி ஒடிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்திலும் ஒரு குழந்தையின் அழுகுரல் அவன் காதில் விழுகிறது, கவனித்தால் யானை வரும் பாதையில் ஒரு குழந்தை மட்டும் தனியாக மாட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றது. மக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். யானை குழந்தையை நெருங்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருவர் ஓடி வந்து குழந்தை எடுத்து தரையில் உருண்டு குழந்தையை யானயின் பாதையை விட்டும் காப்பத்துகிறார். மக்களின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை கரகோஷம் எழுப்பிக் கொண்டு அவரைச் சூழ்கிறார்கள். விரைவில் அந்த கரகோஷம் மன்னர் பாபர் வாழ்க என்று மாறுகிறது. அந்த ராஜபுத்திரன் கூட்டத்தை விலக்கி கொண்டு அந்த மனிதர் யார் என்று பார்க்கின்றான். அந்த மனிதர் வேறு யாருமில்லை மாமன்னர் பாபர்தான் அவர் என்று தெரிந்துகொள்கிறான். மாறு வேஷத்தில் நகர வலம் வந்துகொண்டிருந்த பாபரின் தலைப்பாகை குழந்தயை காப்பாற்றும் வேகத்தில் உருண்டோடிவிட்டதால் மக்கள் மன்னரை அடையாளாம் தெரிந்து கொண்டார்கள். ஒரு குழந்தைக்காக தனது உயிரையே பயணம் வைக்கும் ஒரு மனிதரையா நான் கொல்ல வந்தேன் என்று வெட்கமடைந்த அந்த ராஜபுத்திர இளைஞன் அந்த இடத்திலேயே பாபரின் காலில் விழுந்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அவனை மன்னித்தது மட்டுமில்லாமல் அவனையே தனது மெய்க் காப்பாளானாக நியமித்தார் மாமன்னர் பாபர். ---- சோதிப்போம் நமது தகுதியை

உக்கிரமான போர்க்களத்தில் எதிரிகளின் ஈட்டிகளும், அம்புகளும் தனது தலைக்கருகில் பறந்துகொண்டிருக்கும் நேரத்திலும் தொழுகை நேரம் என்றவுடன் யானையைவிட்டு இறங்கி தொழவிரும்பினார் அப்போது இளவரசராக இருந்த ஒளரங்கசீப். தடுத்தனர் தளபதிகள் உயிருக்கு ஆபத்தாகும் என்று, ஆனால் கேட்கவில்லை தளபதிகளின் அறிவுரைகளை, கேட்டார் இறைவனின் அழைப்பை. யானையைவிட்டும் இறங்கி போர்களத்திலேயே தொழ ஆரம்பித்தார். இதனை கண்ட ஆப்கானிய எதிரிப்படையின் தளபதி உடனே போரை நிறுத்தி, இத்தகைய மனிதருடன் மோதினால் தனக்கு அழிவு நிச்சயம் என்று கூறி போரிலிருந்தும் திரும்பிவிட்டார் --- சோதிப்போம் நமது தகுதிகளை, அலுவலக பணிக்காக மிக எளிதாக தாமதப்படுத்தும் நமது இன்றைய நிலைமையை பரிசோதிப்போம்.


மேல குறிப்பிடப்பட்டவைகள் முந்தைய முஸ்லீம் ஆட்சியாளர்களின் சில தகுதிகள். இதில் கோடியில் ஒன்று கூட இன்று நம்மிடையே இல்லை. அவ்வாறிருக்க எப்படி நாகூசாமல் நாமும் அவர்களைப் போன்று ஆட்சியைக் கொடுப்போம் என்று கூற முடியும்.

இன்றிருக்கும் தமிழக அரசாங்க இயந்திரம் சுமார் 5 லட்சம் அரசு ஊழியர்களை கொண்டது. இதில் முஸ்லீம்கள் சதவீதம் எத்தனை தெரியுமா? தமிழக உள்துறையில் உயர் பதவிகளில் 0% (2006 Status), கீழ்மட்ட பதவியில் 2.6% (சச்சார் அறிக்கை). இஸ்லாமிய வாடையே இல்லாத இவர்கள் மூலம் எப்படி ஒரு இஸ்லாமிய ஆட்சியைக் கொடுக்க முடியும்? ஆட்சிக்குத் தேவையான நிர்வாகத்திறமை, தொழில் நுட்பத் திறமை, ஆளுமைத் திறமை, நீதித் துறை திறமை etc.. தற்போது நமது சமுதாயத்தில் எங்கேயுள்ளது?

இதைப் போன்று சொல்லிக் கொண்டே போகலாம். முதலில் தகுதிகளை வளர்த்துக் கொள்வோம். சுய ஆய்வுகளை (மற்றவர்களை ஆய்வு செய்வதை விட்டு விட்டு) அதிகப் படுத்திக்கொள்வோம். நமது சமுதாயம் எப்போது அந்த தகுதியை அடைகிறதோ அப்போது நாம் ஆட்சியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இருக்காது. அவசியம் ஆட்சி நம்மைத் தேடி வரும். (இன்ஷாஅல்லாஹ் வளரும்)

Nellai Eruvadi S. Peer Mohamed

http://www.nellaiEruvadi.com

http://www.TamilIslamicMedia.com

 

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.