Tamil Islamic Media ::: PRINT
கையிலே ஒரு துணிப்பை, எளிய நடை, எளிய உடை உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்

கையிலே ஒரு துணிப்பை,
எளிய நடை,
எளிய உடை,
இந்தக்கோலத்தில் மலேஷியா திருநாட்டை வலம் வந்தது ஒரு உருவம்.மக்கமா நகரிலும், மதீனா புரியிலும் மடக்கி மடக்கி உலா வந்தது அந்த உருவம்.

அந்த உருவத்தை அறிமுகமில்லாத எவரும் பார்த்தால் யாரோ ஒரு முஸாஃபிர் என்றுதான் எண்ணுவர். அதே நேரத்தில் உத்தமபாளையம் எஸ்.எஸ். ஹஜரத்தைத் தெரியுமா? எனக் கேட்டால், " பார்த்ததில்லை; ஆனால், அவர்களின் அறிவுக் கருவூலங்களை அள்ளிஅள்ளிப் பருகியுள்ளேன்" எனக் கூறுவர்.அந்த அறிவுக் கருவூலங்களை வாரி வழங்கிய, ஞானவள்ளல் இதோ ' இந்த முஸாஃபிர்தான்' எனக் கூறினால், அவர்கள் நம்ப மிக யோசிப்பர்.

ஆமாம்! ஆடை அலங்காரங்களை வைத்து தகுதியை, திறமையை எடை போடும் இன்றைய காலத்திலேயேதான் அப்படியொரு அற்புதப்பிறவி நம்மிடையே நடமாடும் ஞானக்கலைக் கழகமாக பவனி வந்து கொண்டிருந்தது.

எளிய தோற்றம், வலிய கருத்துகள், போட்டி, பொறாமை, சூதுவாது இவற்றின் பொருள் தெரியா குழந்தை உள்ளம். அச்சாணி என்று புலவர்கள் வர்ணிப்பார்களே, அவ்விலக்கியங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

அடுக்குச் சொற்களை அள்ளி வீசி, கவர்ச்சித் தோரணையில் பேசும் மிடுக்கும், மிரட்டும் அவர்களிடம் காண முடியாது. எளிய சொற்கள், செறிந்த கருத்துகள், சுளை உரித்த கனிகளைப் போல் அனைத்தும் ஆதாரப் பேருண்மைகள், ஹதீஸின் அடிப்படைகள், திருக்குர்ஆனின் எதிரொலி, தீர்க்க தரிசனங்கள்.

அயல்நாட்டு ஆட்சியாளர்களும் அமைச்சர் பெருமக்களும் சரியாசனம் தந்து கெளரவித்து வரவேற்று கண்ணியம் பெற்றவர்கள். வெளிநாடு சென்று திரும்புபவர்கள், வெறுங்கையோடு சென்று நிறைய பொருட்களோடு மீள்வது கண்கூடு. ஆனால், பன்முறை சிங்கை, மலேஷியா, பிலிப்பைன், வியட்நாம், அரபு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்லும் போதும் ஒரு துணிப்பை, பேனா, நோட் புக் ஆகியவைகளே. வரும்போதும் அவைகளே. சுங்க அதிகாரிகள் இச்செயல் கண்டு வியப்பு மேலிட பெருமதிப்பளித்து " மகான் " எனக் கருதி கண்ணியத்துடன் ஒதுங்கி வழி விடுவர்.

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்தம் துணைவியர்களான உம்மஹாத்துல் மூமினீன்கள், ஹளரத் உமர் ஃபாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹளரத் அலீ ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹளரத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு, ஹளரத் ஹுதைஃபத்துல் யமான் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆகிய ஸஹாபா பெருமக்களையும், குத்புல் அக்தாப் கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு தஆலா அன்ஹு, அஜ்மீர் நாயகம், நாகூர் ஆண்டகை பாதுஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹும் ஆகிய வலிமார்களையும் கனவில் சந்திக்கும் பாக்கியம் பெற்றவர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மேதை, சன்மார்க்க மூதறிஞர், தமிழகத்தின் கஜ்ஜாலி, நடமாடும் பல்கலைக் கழகம், சன்மார்க்கப் பள்ளிகளையும்,சமயச் சொற்பொழிவு சபைகளையும், தீனொளி பரப்பிடும் நன்னூலகங்களையும் தோற்றுவித்த நபிகுல வாரிசு, மாமேதை, இஸ்லாமியத்தின் அனைத்துக் கலைகளையும் தாய்த்தமிழ் மொழியாம் தமிழில் எழுதி எழுதிக் குவித்த எழுத்துலக ஜாம்பவான்.

இஸ்லாமியக் கலைகளை தமிழில் எழுதுவதிலேயே தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அற்பணித்த தியாகமேரு.

அல்லாஹ்வின் திருவேதத்திற்கு விரிவுரை, விளக்கவுரை, ஒவ்வொரு வசனங்களின் உள்ளிலும் மனித வாழ்வுக்கு தேவையான எப்படிப்பட்ட படிப்பினைகள் நிரம்பிப் போயுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் அடங்கிய தஃப்ஸீரை தாய்மொழியாம் தமிழில் முதன் முதலாக ஏழாயிரம் பக்கங்களில் ஏழு பாகங்களாக வடித்துக் கொடுத்த பேறுபெற்ற அறிஞறேறு, அறிவுமேரு. தம் ஆசிரியத் தந்தை மெளலானா அப்துல் அலீ ஹஜ்ரத், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியின் ஆசிரியப் பெரியாரால் தமிழகத்தின் மூத்த இஸ்லாமிய மாத இதழான ஸைஃபுல் இஸ்லாமில் துணை ஆசிரியராகச் சேர்க்கப்பட்டு தம் எழுத்துப் பணியைத் துவங்கினார்.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன், இஸ்லாமியக் கொள்கையிலேயே பிளவு ஏற்படுத்த முனைந்த காதியானி அஹ்மதிய்யா இயக்கத்தை தமிழ்நாட்டில் வேரூன்ற விடாமல் தடுக்க அரும்பாடுபட்டார்கள். இதற்காவே ஹிஃபாஜத்துல் இஸ்லாம் என்னும் பெயரில் பத்திரிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது. அப்பத்திரிக்கையின் ஆசிரியராகச் சேர்ந்து காரசாரமாக எழுதினார். இந்த எதிர்ப்பில் தாஜுல் இஸ்லாம், கமருஜ்ஜமான், முஸல்மான், அல்ஹிதாயா போன்ற மாத இதழ்களும் பெரும் பங்காற்றின.

மத்திய சட்டசபை உறுப்பினர், மெளலானா ஸய்யித் முர்தஜா அவர்கள், பாக்கியாத்தின் ஆசிரியப் பெரியார் மெளலானா அப்துல் அலீம் ஸித்தீக்கி அவர்கள், பாக்கியாத்தின் நான்காவது நாஜிர் ஷேக் ஆதம் ஹஜ்ரத் போன்ற ஜாம்பவான்களை அழைத்து வந்து பொதக்குடி, அத்திக்கடை, கொடிக்கால்பாளையம் போன்ற ஊர்களில் காதியானி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். இப்பணியில் கூத்தாநல்லூர் மன்பவுல் உலா அரபிக்கல்லூரியின் முதல்வர் மெளலானா முஹம்மது அலீ பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் பொருளாலும், செல்வாக்காலும், உழைப்பாலும் ஆற்றிய தொண்டு மறக்க இயலாது என்று மெளலானா எஸ்.எஸ் ஹஜ்ரத் அவர்கள் தம் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

காதியானிகள் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள் என்பதை உணர்ந்து, "ஹிஸ்ஃபுல்லாஹ்" என்ற பெயரில் சன்மார்க்கப் பிரச்சார சபையை ஹிஃபாஜத்துல் இஸ்லாம் சங்கம் நிறுவிற்று. இப்பிரச்சார சபையில் எழுபது உலமாக்களைச் சேர்த்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று காதியானி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார்கள்.

காதியானிகள் தங்கள் பிரச்சாரத்தின் போது " சன்மார்க்கத்திற்காக உலமாக்கள் எதையும் செய்யவில்லை " என்று அவர்களைக் கண்டனம் செய்ததுடன், திருக்குர்ஆனுக்கு தமிழில் மொழி பெயர்ப்பும், விரிவுரையும் எழுதுவதாகப் பிரகடனம் செய்து ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு தங்களது முதற்பகுதியையும் வெளியிட்டனர்.

இதனைப் பார்த்த முஸ்லிம் செல்வந்தர்கள் தமிழ் தஃப்ஸீர் வெளியிடும் பணியில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். ரவணசமுத்திரம், முதுகுளத்தூர், வழுத்தூர் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர்கள் தமிழ்த் தஃப்ஸீரை வெளியிட முன்வந்தனர்.

இந்நிலையில் திருக்குர்ஆன் தமிழ் பெயர்ப்புக்கென, இஸ்லாமிய நூற் பிரசுரச்சங்கம் ஒன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஸ்தாபகர் வள்ளல் காஜா மியான் அவர்களால் 1926- ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட்டு தமிழ் மொழி பெயர்ப்புப் பணி துவங்கிற்று. இப்பணியில் அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாக்கவி அவர்களுக்கு உறுதுணையாக உத்தமபாளையம் மெளலானல்ஹாஜ், அல்லாமா எஸ்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்கள் செயல்பட்டார்கள்.

" என்னுடைய தந்தை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறைக்கு தர்ஜமா பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்கு உறு துணையாக இருந்தவர் உத்தமபாளையம் மெளலானா எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்களாவார். உண்மையிலேயே ஆலிம்களில் பன்னூலாசிரியர் என்பது அவருக்குத்தான் பொருந்தும். தஃப்ஸீரும் எழுதியிருக்கிறார். புகாரி ஷர்ஃபையும் மொழி பெயர்த்திருக்கிறார் " என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஏ.கே..அப்துஸ் ஸமது எம்.பி. அவர்கள் 27-1-1995 அன்று நடந்த சென்னை வாழ் மதுரை மாவட்ட உத்தமபாளையம் தாலுகா முஸ்லிம் ஜமாஅத் நல்வாழ்வுச் சங்கத்தின் ஆண்டு விழாவில் பேசிய உரை மேற்படி சங்கத்தின் சிறப்பு மலர் 27-7-1996 இல் வெளிவந்துள்ளது.

இச்சங்கத்தின் மூலம் இமாம் கஜ்ஜாலி, உமரே ஃபாரூக் ஆகிய இரு நூற்கள் உத்தமபாளையம் மெளலானா எஸ்.எஸ். ஹஜ்ரத் அவர்களால் எழுதப்பட்டு முறையே 1928-1929 இல் வெளியிடப்பட்டது. ஸீரத்துன்னுஃமான், ஸல்தனதே குதாதா ஆகிய இரு நூற்களும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வெளியிடப்படவில்லை.

19-2-1929 இல் திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு இரண்டு ரூபாயில் சில பகுதிகளுக்கு மட்டும் இப்பிரசுர சங்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அச்சங்கம் என்ன காரணத்தாலோ செயலற்றுப் போனது. அதன் பின்னர் கூத்தாநல்லூரில் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புக்கென சாந்திப் பிரகடன சபை என்னும் பெயரில் ஓர் அமைப்பு உருவாயிற்று.

மொழிபெயர்ப்புப் பணிக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்க பல மாதங்கள் பல உலமாக்களையும் கலந்து ஆலோசித்தனர்.இறுதியாக பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யாவின் முன்னாள் முதல்வரும், பரங்கிப்பேட்டை மத்ரஸா காதிரிய்யாவின் முதல்வருமான மெளலானா சே.மி.ரி. அப்துர் ரஹ்மான் பாக்கவி அவர்களை அனுகினர். அன்னாரோ இப்பணிக்கு மிகப் பொருத்தமானவர் உத்தமபாளையம் மெளலானா எஸ்.எஸ்.ஹஜ்ரத் அவர்களே என்று கூறியதுடன், இம்மொழிபெயர்ப்பை பார்வையிடுபவர்களில் ஒருவராகவும் இருந்தார். இவருடன் பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யாவின் அப்போதைய முதல்வர் வடகரை மெளலானா முஹம்மது ஷரஃபுத்தீன் ஹஜ்ரத் அவர்கள், பொதக்குடி முஹம்மது அப்துல்லாஹ் நூரி அவர்கம், கூத்தாநல்லூர் முஹம்மது அலீ ஹஜ்ரத் ஆகியோரும் பங்காற்றினர்.

உத்தமபாளையம் எஸ்.எஸ்.ஹஜ்ரத்தை உத்தமபாளையத்திலிருந்து வரவழைத்து பொறுப்பை ஒப்படைத்தனர். மொழிபெயர்ப்புப் பணி 15-4-1933 இல் ஆரம்பிக்கப்பட்டு பதினாறு மாதங்களில் முடிந்தது. அல்லாஹ்வின் கிருபையால் 1934 ஆம் ஆண்டு " திருமறைத் தமிழுரை " என்னும் பெயரில் பத்து ஜுஸ்வுக்களுக்கு மட்டும் விளக்கக் குறிப்புகளுடன் ஐநூறு பக்கங்களில் வெளியாயிற்று.

இதனைப் பார்த்த அதே ஊர்ப்பிரமுகர் கான்சாஹிபு ஆலி ஜே.எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள், " நீங்கள் எழுதிய திருமறைத் தமிழுரை ஐநூறு பக்கங்கள்தான் உள்ளன. விளக்கக் குறிப்புகள் போதாது. எனவே, ஆயிரம் பக்கங்களில் இருக்கும் விதமாக, மொத்தம் மூன்றாயிரம் பக்கங்களில் எழுதித் தாருங்கள். என் செலவில் வெளியிடுகிறேன் " என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, மெளலானா அவர்களால் கடைசி பத்து ஜுஸ்வுக்களுக்கு மட்டும் விரிவுரை எழுதிக் கொடுக்கப்பட்டது.

திருமறைத் தமிழுரையின் எஞ்சிய பகுதியையும் கூத்தாநல்லூர் சாந்திப்பிரகடன சபையினர் வெளியிடவில்லை.மர்ஹூம் கான் சாஹிபு முஹம்மது இஸ்மாயீல் அவர்களிடம் எழுதிக் கொடுக்கப்பட்ட தஃப்ஸீரும் வெளியிடப்படவில்லை.

சென்னை ஷாஹுல் ஹமீது அன் சன்ஸ் நிறுவனத்தாரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தஃப்ஸீர் வெளியிடும் பணி தாமதமானது. இறுதியில் அப்பணியையும் கல்வத்து நாயகம் அவர்களின் பிரதான கலீஃபா ஷெய்குனா முஹம்மது யூசுஃப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மூலம் எஸ்.எஸ்.முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாக்கவி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அப்பணி ஹிஜ்ரீ 1-1-1364 இல் எழுதி முடிக்கப்பட்டது.

இதன் முதல் பாகம் 1937-இரண்டாம் பாகம் 1940- மூன்றாம் பாகம் 1950- நான்காம் பாகம் 1956- ஐந்தாம் பாகம் 1958- ஆறாம் பாகம் 1959- ஏழாம் பாகம் 1961 இலும் வெளிவந்தது. அதன்பின்னர் சுமார் ஐம்பது ஆண்டுகள் வெளிவரவில்லை. மெளலானாவின் புதல்வர் மெளலவி முஹம்மது ஜஃபரின் முயற்சியால் கடந்த 2007- ஆம் ஆண்டு அகில மலேஷிய நாணய மாற்றுச் சங்கத்தின் தலைவரும் வள்ளல் பெருந்தகையுமான பனைக்குளம் முனைவர் ஹாஜி சீ.மு.நூ.மு.மு.யூ. முஹம்மது ஷுஐப் MBA, PhD; அவர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் இருபது பாகங்களாக வெளியிட்டார்கள். அல்லாஹ் வின் கிருபையால் தற்போதும் தொடர்ந்து வெளிவருகிறது.

மெளலானா அவர்களால் எழுதப்பட்ட நூற்களில் சில..

1- இஷாஅத்துல் ஹஸனாத் ஃபீ தர்ஜமத்தில் பாக்கியாத்திஸ் ஸாலிஹாத் (1932)
வெளியீடு:- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், வேலூர்.

2- திருமறைத் தமிழுரை (1934)

வெளியீடு:- சாந்திப்பிரகடன சபை, கூத்தாநல்லூர்.

3- தப்ஸீரில் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத் (ஏழு பாகம்)

4- இஸ்லாம் மத விளக்கம் (1938)

5- நற்குண நாதர்

6- நபிகள் கோன் (1937)

7-மகா உண்மையாளர் (1939)

8- திருத்தூதர் (1940)

9- இமாம் கஜ்ஜாலி (1928)

வெளியீடு:- சன்மார்க்கத் தொண்டர் சபை, கூத்தாநல்லூர்.

10- இமாம் கஜ்ஜாலி (1928)

11- உமர் ஃபாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு (1929)

வெளியீடு:- இஸ்லாமிய நூற்பிரசுரச் சங்கம், திருச்சி.

12- மெளலானா முஹம்மது அலி ஜெளஹர் (1938)

வெளியீடு:- .எஸ். ஸதக் தம்பி மரைக்காயர். சென்னை.

13- தஃலீமுல் இஸ்லாம் ஹனஃபி (1949)

14-தஃலீமுல் இஸ்லாம் ஷாஃபிஈ

15- தொழுகையின் சீரிய முறை(1950)

16- துஹ்ஃபத்துஸ் ஸாலிகீன் (1950)

17- அல்அன்வார் (1952)

18-

ஷஹீதே கர்பலா (1949)

19- குத்பா கொத்து (1954)

20- இஸ்லாமியத் திருமணம் ( 1955)

21- ஞானிபானு (1931)

22- ஜவாஹிருல் புகாரி (1950)

23- அகத்தூய்மை (1952)

24- தஜ்ரீதுல் ஜாமிஇஸ் ஸஹீஹில் புகாரி
மூன்று பாகம் 1954-1956-1957.

25-ரமலான் நோன்பு (1957)

26- ஞானவழி (1961)

27- தொழுகை விளக்கம் (1962)

28- ஹளரத் முஹம்மது( ஸல்)
மூன்று பாகம் 1962-1964-1968

29- கன்ஜுந்தக்காயிக்.
இஸ்லாமியச் சட்ட விளக்க நூல் மூன்று பாகம் 1968-1970-1975

30-இஸ்லாமியக் கொள்கைகள்( 1969)

31- அண்ணல் நபியின் அறநெறி (1972)

32- திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு (1972)

33- பிதாயத்துல் ஹிதாயா (1973)

34- கவலையகற்றும் கருவூலம் (1976)

35-ஸஹீஹு முஸ்லிம்( இரண்டு பாகம்)

36- தரீகத்துல் அத்தாஸிய்யா (1962)

37- பெருமானாரின் பரம்பரை (1984)

38- இஸ்லாமியப் பண்பாடு (1995)

39-ஸலவாத்தும் அதன் பயன்களும் (2003)

40- நாற்பது ஹதீஸ்கள் (2004)

41-தென்னாட்டுப் பேரொளி

42- நபிகளாரின் தனித்தன்மைகள் (2005)

43-பெருமானாரின் துணைவியர் (2005)

44- ஈமானுடன் சீமானாவது எப்படி?( 2005)

45- நபிகளார் காலத்து யுத்தங்கள் (2008)

குறிப்பு:-

1-காயிதேமில்லத் மலர்

2-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் நூற்றாண்டு விழா மலர்

3- இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்

4- பழங்காசு ஸ்ரீனிவாசன் நூல்

5- செ. திவான் அவர்கள் எழுதிய நூல்
மற்றும் பத்திரிக்கைகள், மலர்களில் வெளி வந்தவைகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.