Tamil Islamic Media ::: PRINT
வலிபோக்கும் ஆன்மீக வழிகள்

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நபித்தோழர் உஸ்மான் பின் அபில் ஆஷ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வந்து முறையிட்டார்கள். நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து என் உடலின் ஒரு பகுதியில் வலியை உணர்கிறேன் என்று, அதற்கு நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் “ உன் உடலின் வலிக்கிற பகுதியில் உனது கையை வைத்து பிஸ்மில்லாஹ் என்று மூன்று முறை கூறவும், பின்னர் ஏழு தடவை ”அவூது பில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜ்து வ உஹாதிர்” என்று கூறவும். (நூல்: முஸ்லிம்)

இதே ஹதீஸ் இன்னும் இரு இடங்களில் சிறி்ய வார்த்தை மாற்றங்களோடு வருகிறது. அதில் ”அவூது பி இஜ்ஜதில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜ்து வ உஹாதிர்” என்று “ இஜ்ஜதில்லா “ என்ற வார்த்தை சேர்த்து வருகிறது. இன்னும் அந்த நபித்தோழர் கூறுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது “ நான் நபியவர்கள் கூறியது போன்று செய்தேன் அல்லாஹ் என் வலியைப் போக்கினான் இன்னும் எனக்கு பரிபூரண சுகத்தையும் தந்தான். அதன் பின் என் குடும்பத்தார்களும், மற்றவர்களும் வலி என்று முறையிடும் போதேல்லாம் நான் அவர்களுக்கு இந்த துஆவைக் கற்றுக்கொடுக்க தவறுவதில்லை”.

இன்னொரு இடத்தில் “வலியினால் நான் உயிர் மாண்டு போகும் நிலையில் இருந்தேன்” என்றும் வருகிறது.

இந்த ஹதீஸ் சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த துஆவின் பொருள் “அல்லாஹ்வின் முழுமையான கண்ணியத்தைக்கொண்டும், இன்னும் அவன் சக்தியைக்கொண்டும் நான் உணரும் இந்த வலியை விட்டும், இன்னும் இதன் மூலம் எதுவும் வியாதிவந்து விடுமோ என்ற எண்ணதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்”.

நபி மருத்துவம் என்பது இன்றும் உலகில் கோலேச்சிக்கொண்டிருக்கிற ஒரு செய்தியாக இருக்கிறது. நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) எவ்வாறு உலகில் சமயம், அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் இலக்கணம் போன்ற எல்லா துறைகளுக்கும் சிறந்தததொரு  முன்மாதிரியாக இருந்தார்களோ அது போன்றே மருத்துவத்திலும் நபிகென்று ஒரு தனி இடம் உண்டு.

நபித்தோழர்கள் தங்களின் குடும்ப செய்திகள், பொருளாதாரம், மார்க்கம் போன்றவற்றில் சந்தேகம் ஏற்படும் போது எப்படி நபி பெருமான் அவர்கள் பக்கம் திரும்பினார்களோ அது போன்று உடல் ரீதியான நோய்களும், அசவுரியங்களும் ஏற்படும் போதும் நபியிடம் வந்து அதற்கான தீர்வை வேண்டி நின்றார்கள் அதன் மூலம் இந்த சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தான் நபி மருத்துவம்.

மற்ற மருத்துவத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்; மற்றவை மனிதனின் அறிவுகளைக்கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டவை, ஆனால் இது இறைவனின் புறத்திலிருந்து நபியின் மூலமாக மனித குலத்திற்கு அருளப்பட்ட மிகச்சரியான செய்தியாகும்.

நாம் மேலே பார்த்த ஹதீஸ் நம்முடைய முன்னோர்களான ஸலபுகளாலும், ஆன்மீக வழிகாட்டிகளான இறைநேசச்செல்வர்களாலும் முஜர்ரப் என்று சொல்லப்படக்கூடிய (அதை செய்து அனுபவப்பூர்வமாக அதனுடைய பயன் அடைந்துகொண்ட செய்திகளில் இதுவும் ஒன்றாகும்).

பொதுவாக வலிகள் உடலின் மொழிகள். வந்திருக்கும் ஒரு நோயையோ அல்லது வரவிருக்கும் ஒரு நோய் குறித்தோ உடல் தரும் சமிக்கைகளின் வெளிப்பாடுதான் வலிகள். பொதுவாக இன்று நம்மிடம் வலிகள் என்று சொன்னாலே மருந்தகங்களுக்கு செல்லாமலே புருபன் போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தும் பழக்கம் உண்டு. அது சாதாரண வலிகளாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அதுவே இதயவலி என்று சொன்னால் நாம் அப்படி பயன்படுத்துவது இல்லை.

பொதுவாக எந்த மருத்துவமாக இருந்தாலும் நம்பிக்கை என்பது வேண்டும். கிட்டத்தட்ட 75 விழுக்காடு நோய் நிவாரணம் கிடைப்பதெல்லாம் நாம் மருத்துவரிடம் சென்று விட்டோம் என்பது கொண்டோ அல்லது நாம் மருந்து உட்கொள்கிறோம் என்ற எண்ணம் கொண்டோ குணமாகிறது மீதம் உள்ள 25 சதவிகித்தில் 15% மருத்துவரின் வார்த்தை கொண்டும் மீதம் உள்ள வெறும் 10% மாத்திரைகளினால் சுகம் கிடைக்கிறது என்பது நான் சமீபத்தில் வாசித்த ஒரு புத்தகத்தகவல்.

என்ன ஒரு அற்புதமான வைர வரிகளில் நபியவர்கள் இந்த சமுதாயத்தை பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவம் செய்வதானாலும் இறைவனிடத்திலே அதற்கு முழுமையான நிவாரணத்தை கேளுங்கள். இறைவனை அன்றி உங்கள் நோய்குரிய சரியான நிவாரணத்தை யாரால் கொடுக்க முடியும். அவன் தான் உங்கள் உடலுக்கும், உங்கள் நப்ஸுக்கும் எஜமானன். அவனால் மட்டுமே அதன் இரகசியங்களை புரிந்துகொள்ள முடியும். நாம் எப்பொழுது முழு நம்பிக்கையோடு அவனிடன் முழு ஒப்படைப்பை செய்து விடுகிறோமோ அப்பொழுது அவனே அதற்கு பொறுப்பாளியாக ஆகிவிடுகிறான்.

பொய்யே உரைக்காத சாதிகுல் அமீன் சத்தியத்தூதர் நபிகள் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ் எந்த ஒரு நோயையும் இறக்கவில்லை அதனின் நிவாரணத்தையும் இறக்கியே தவிர அதை அறிந்தவர்கள் அறிந்திருக்கிறார்கள் அதை பற்றி அறியாதவர்கள் அறியாமலே இருந்து விடுகிறார்கள்“. நல்ல வார்த்தைகளும், நம்பிக்கைகளும் தான் நிவாரணத்தை கொண்டுவருபவை

இந்த ஹதீஸில் கூட நபியவர்கள் சொல்லித்தந்த மிக அழமான வார்த்தைகள் “இறைவனின் கண்ணியத்தைக்கொண்டு பாதுகாப்பு தேடுங்கள்” ஏனெனில் உலகில் எல்லாம் அதற்கு முன் மண்டியிடுகின்றன, அது போன்று அவனது சக்தியைக்கொண்டும் பாதுகாப்பு தேடுங்கள் அவன் சக்தியல்லாத ஒரு சக்தி உலகில் இல்லை. வெறும் வலி என்று மட்டும் நபியவர்கள் நிறுத்தவில்லை மாறாக அதன் மூலம் தோன்ற இருக்கிற அனைத்துவிதமான கெடுதிகளைவிட்டும் பாதுகாப்பு தேடினார்கள்.

வயிறு வலிக்கிறதா அல்சராக இருக்கலாம், அடிவயிறு வலிக்கிறதா சிறுநீரக கல்லாக இருக்கலாம், இடது கை வலிக்கிறதா இருதய நோயாக இருக்கலாம், என்றெல்லாம் நாமாக முடிவு செய்து பயம் கொள்கிறோமே, அவை அத்தணைக்கும் இதில் நிவாரணம் உண்டு.இங்கு தேவை முழுமையான 100% நம்பிக்கை மட்டுமே. என் நபி சொன்னார்கள் நான் செய்கிறேன். இறைவனிடமே நிவாரணத்தை கேட்கிறேன் என்று ஆகிவிடவேண்டும்.

“அட போங்க இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா “ என்று மருந்துகளை உண்கொண்டாலும், அங்கு யார் நிவாரணத்தை தர இருக்கிறார்கள், நாம் சாப்பிடும் மருந்துகளா? மருந்துகள் என்று நம்பினால் நாம் ஈமானிய நம்பிக்கைவிட்டு வெகு தூரம் சென்று விட்டோம் என்று அர்த்தம். நான் மருந்து சாப்பிட்டாலும் அந்த மருந்தைக்கொண்டு ஷிபாவைத்தருவது என் ரப்பு என்ற நம்பிக்கை வரவேண்டும்.

சமீபமாக ஒருவரை நலம் விசாரிக்க சென்றிருந்தேன் அவர் ஒரு புற்று நோயாளி, அந்த வலியினால் அவர் படும் அவஸ்தையைக்கண்டு உண்மையில் மிகவும் ஆடிப்போனேன். அல்லாஹ் அக்பர். உலகில் உள்ள அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இறைவன் பரிபூரண சுகத்தை தருவானாக, அவர்கள் வலியினால்படும் வேதனையிருந்து இந்த துஆவின் பரக்கத்தால் அவர்களைக்காப்பானாக.

இந்த துஆவினால் பிரயோஜம் அடைய நினைப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள், இது உங்களின் நம்பிக்கையை பொருத்தே அமையும் சிலருக்கு ஒரு தடவை ஓதினால் போதும், சிலருக்கு ஆயிரமும், லட்சமும் கூட ஆகலாம். நிவாரணம் கிடைக்கும் வரை செய்தால் பலன் நிச்சயம்.

இறைவன் திருமறையில் கூறுகிறான் “ உங்கள் துஆக்கள் மட்டும் இல்லை என்றால் அல்லாஹ் உங்களை ஒரு பொருட்டாகவே கருதியிருக்க மாட்டான்”

நபி வழியை நம்வழியாக்குவோம் வலியை இல்லாமல் ஆக்குவோம்.

- பேரா. இஸ்மாயில் ஹஸனீ

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.