Tamil Islamic Media ::: PRINT
குர்ஆன் ஓரு இறை வேதம், முஹம்மத் நபி (ஸல்) ஓர் இறைத்தூதர்

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அல்குர்ஆன் 69:44

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 10:15

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:101

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. அல்குர்ஆன் 10:37-38

அல்லது “இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 11:13

(நபியே! நீர் இதைக் கூறும் போது:) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.” அல்குர்ஆன் 11:35

முரண்பாடின்மை!

முஹம்மது நபி அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து “அதை இறைச் செய்தி” என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன. பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒரு நாள், இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக்கணக்கில் பேசிட இயலாது.

எந்த மாபெரும் அறிஞரின் ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தாலும் ஏராளமான விசயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.

  • முன்னர் பேசியதை மறந்து விடுதல்!
  • முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!
  • கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றி பேசுதல்!
  • யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!
  • வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்!
  • விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!

மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.

ஆனால் திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுகளில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில்; முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.

மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.

இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது.

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். அல்குர்ஆன் 4:82

மிக உயர்ந்த தரம்!

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.

மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!

இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.
இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபு மொழியில் கரை கண்டவராகவும், அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் முஹம்மது நபி அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். அல்குர்ஆன் 29:48

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். அல்குர்ஆன் 7:157

அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.

படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்

பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.

மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.
சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் ஏதுவும் அந்த நூலில் இருக்காது.

ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.

இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் “இது இறை வேதம்” என்று முஹம்மது நபி அவர்கள் வாதிட்டார்கள்.

குர்ஆன் முஹம்மது நபி அவர்களின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.


இசை நயம்!

எந்த இலக்கியமானாலும் அதில் ஒசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.

ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.

அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும்,சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.

இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.

அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர்.

இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.


காலத்தால் முரண்படாதது!

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

 

  • திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

  • அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

  • அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
  • இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.
  • அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
  • ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
  • அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.

முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. ( பார்க்க அல்குர்ஆன் 2:23, 10:38, 11:13, 17:88, 52:34)

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.
முஹம்மது நபியவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.

முஹம்மது நபி அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர்.


பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் குர்ஆன் கூறுகிறதே தவிர யூத கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

இவர் அவரைப் பெற்றார், அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.
இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத கிறித்தவ வேதங்களில் மிகப் பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளும் மட்டுமே உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை. ஆனால், திருக்குர்ஆன் மிகக் குறைந்த அளவில் மனிதர்கள் படிப்பினை பெற தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும் மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஏற்கத் தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையற்றதாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத கிறித்தவ மக்களும் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத் தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழி காட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

எனவே முற்றிலும் இது இறைவன் புறத்திலுருந்து நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.


எதிர்பார்ப்புகள் இல்லை

முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தார் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.
தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த லாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும் நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர்.

எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம். இருக்கின்ற செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.

ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.

அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்தவர் இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன் வர மாட்டார்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.

 

  • இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை.
  • அரண்மனையில் வசிக்கவிலிலை.
  • கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
  • அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிடவில்லை.
  • ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.
  • நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
  • வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
  • தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
  • ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது எனடறு பிரகடனம் செய்தார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.

மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகத்திலிருந்து விடுபடுவார். புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.

  • “கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது”
  • “என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது”
  • “தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது”
  • “நானும் உங்களைப் போன்ற மனிதனே”

 

என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகிறது.

நீர் எப்படி மனிதருக்கு அஞ்சுகிறீர் எனக்கு ஏன் அஞ்சவில்லை என்று கடவுள் தம்மைக் கண்டித்ததாகக் கூறினார்கள்.

கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது, அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் அவரிடம் தான் நடந்து கொண்ட முறையை இறைவன் கண்டித்ததாகக் கூறினார்கள்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் தமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள்

தானே கடவுள் என்று அறிவித்தாலும் நம்பும் அளவுக்கு மக்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தும் தம்மையும் அவர்களைப் போன்ற மனிதராகவே கருதினார்கள்.

இந்த விபரங்கள் யாவும் இறைச் செய்தி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன.

தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாகவே இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 

  • அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை!
  • அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை!
  • காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
  • தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!
  • “இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்” என்று எச்சரித்தார்கள்!

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர் விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை.

மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகக் கடவுள் வார்த்தை என்று கற்பனை செய்தார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.

 

நன்றி: http://www.tamililquran.com
குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பை படிப்பதற்கு இந்த இணைய தளத்தைப் பார்க்கவும்.: http://www.tamililquran.com/intro_2.asp

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.