Tamil Islamic Media ::: PRINT
வேதம் தந்த மாதம்

– மஆலி

 

பிறை பிறந்தது – ரமளான்
முகம் மலர்ந்தது

தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில்
தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது

தலை தாழ்ந்தது – நெற்றி
தரை தொட்டது

நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு
இறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது

அலை ஓய்ந்தது – மனம்
அமைதியானது

தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனி
தூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது

பாதை புலர்ந்தது – அதில்
பயணம் தொடர்ந்தது

வேதவரியும் தூதர்மொழியும் துடுப்பானது – ஓடம்
விரைந்து செல்லும் இலக்கு மறுமை வெற்றியானது

மனதை வென்றிடு – மறுமைச்
சுவனம் வென்றெடு

விரும்புவதைத் துறப்பதுவே நோன்பென்பது – இறை
விருப்பப்படி வாழ்வதுவே தீன் என்பது

பசி தாகமே – நல்ல
பயிற்சி தந்தது

எளியோர்க்கு உணவளிக்கும் உணர்வு வந்தது – அது
ஏழைசிரிப்பில் இறைவனையே காணச் செய்தது

இறை வேதத்தை – தினம்
இரைந்தோதியே

கத்ரிரவுத் * தொழுகை நல்ல பயிற்சியானது – உளம்
கசிந்துருகி இறையருளை நாடி நின்றது

நிலா தேய்ந்தது – மாதம்
நிறைவடைந்தது

ஈகைத்திரு நாள் நினைவில் உளம் மகிழ்ந்தது – உலகம்
இஸ்லாத்தின் மகிமைகளை அறியலானது

வேதம் வந்தது – உலகம்
விழித்துக் கொண்டது

ஓதுவதைக் கடமையென உளமேற்றது – தினம்
ஓதியுரை அறியாமை இருளகன்றது

அழை என்பதும் – அதன்
ஆணைவுணர்ந்திடு

அழைப்பதிலே நபிவாழ்வு தியாகமானது – அதன்
அடிப்படையில் உழைத்து உலகை உய்வித்திடு

லைலத்துல் கத்ர் – குர்ஆன் அருளப்பட்ட மகத்தான இரவு

நன்றி :
சமரசம்
16 -31 ஆகஸ்ட் 2010

The view points and opinion solely those of the author or source. TamilIslamicMedia.com is not responsible for the posted contents.
 


No rights reserved.