Tamil Islamic Media

மரணம் நோக்கி...

மரணம் நோக்கி...

இந்த வாழ்க்கை ஒருபோதும் நிரந்தரமில்லை. அது சடுதியாக ஒரு நாள் நின்றுவிடும்.தொலைநோக்கு கோபுரங்கள் செயலிழப்பதால் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக எல்லா வலையமைப்புக்களும் துண்டிக்கப்படுவதுபோல மரணம் வந்து விட்டால் ஒரு மனிதனது எல்லா செயற்பாடுகளும் நிரந்தரமாகவே அறுபட்டுவிடும். அவன் செயலிழந்து விடுவான்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளை நிபுணர்களின் உதவியுடன் உடனுக்குடன் சீர்செய்து சேவையை பெற்றுக்கொண்டுவிடலாம்.

மனித ஆன்மாவின் செயற்பாடுகள் நின்றுபோனால் அவயவங்கள் செயலிழந்தால் எந்த கைதேர்ந்த விற்பன்னராலும் அதை சீர்செய்து விடமுடியாது. செயழிலந்த ஒரு தொகுதியைக்கூட செயற்படவைக்கமுடியாது.

இதனைத்தான் இன்பச்சுகண்டிகளை அறுத்து துண்டிக்கும் மரணம் குறித்து அதிகம் நினைவுகூறுமாறு நபியவர்கள் போதித்தார்கள்.

மரணம் கஷ்டமானது.வேதனைதரக்கூடியது. அதனை சுவைப்பவருக்கும் கடும் சிரமம் ஏற்படும்.சுவைத்துத்தான் தீரவேண்டும். ஒரு மரண நிகழ்வை மரண வலியை மரணத்தை காண்போருக்கும் அதனை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருக்காது

விம்மலும் குமுறலும் மனதைக்குடையும். வார்த்தைகளற்று விக்கித்துப்போவோம். எல்லோரும் இதுபோன்ற மிகுந்த சிரமங்களைக்கடந்தேயாகவேண்டும்.

மரணம் உலக வாழ்வு குறித்தான உண்மைகளை தற்காலிகமாக உணரச்செய்துவிடும். காலப்போக்கில் எம் நினைவுகளை அது கடந்து எங்கோ சென்றிருக்கும்.

நாள் போகப்போக மரணநினைவு ஞாபகத்தைவிட்டும் அப்படியே மறைந்து விடும். மரணித்தவரது நினைவுகள் நீண்ட நாள் எமக்கு முன் வந்து நிழலாடும். அவருடன் கழித்த நாட்களை நினைவு கூர்ந்து விடும்.

எல்லோரும் மரணிப்பது நிச்சயம். ஆனால் ஒரு மரணம் சூழ இருப்பவர்களுக்கான, நெருங்கிய உறவுகளுக்கான தற்காலிக மாரடைப்புத்தான். திடுக்கிட வைக்கும். திக்குமுக்காடி திணறிப்போவோம்.

மரணம் எம்மை மென்மைப்படுத்திவிடுகிறது. நல்ல மரணங்கள் வானுலகில் சென்று அந்த ஆன்மாவை மேன்மைப்படுத்தும். வானவர்கள் மெச்சுவார்கள். பயங்கர உள்ளங்களை வன்நெஞ்சங்களை மிருதுவாக்கி தளர்த்தி விடுகிறது மரணம்.

மரணம் இறைவன் பால் எம்மை திசைதிருப்பி விடுகிறது.
பாவங்களை விட்டும் தூரமாக்கிவிடுகிறது.
உலகம் நிலையற்றது என்பதை மரணம் தான் நினைவூட்டிவிடுகிறது.
மரணத்தை மறக்கும் போதுதான் இரணத்துக்கான பேயாட்டம் தலைவிரித்தாட ஆரம்பமாகிறது.
இறைவனை விட்டும் படிப்படியாக விலகி தூரமாகிவிடுகிறோம்.

ஆன்மா சுயநலப்போர்வையை விரும்பிவிடும்.
அதனை அணிந்துகொண்டே உலகைவலம் வரும்.

சொத்துக்களைக்குவித்து விழுங்கி ஏப்பம் விடவும்
எஞ்சியதை எண்ணி எண்ணியே ஏமாந்து போகவும் செய்யும்.
உலகமே எல்லாம் என்றாகிவிடும்.

எம்மை பலவீனங்கள் புடைசூழும்.
உலகமே பேரிலக்காகிவிடும்.
மரணம் வேண்டப்படாத ஒன்றாக மாறும்.
வெறுப்புக்குரியதாகவும் மாறும்.

நபியவர்கள் கூறியது போல

உள்ளத்தை வஹ்ன் பீடித்து உலகை நேசித்து வாழும் பக்குவம் உண்டாகும்.
மரணத்தை வெறுக்க விரண்டோட பழகியிருப்போம்.

மரணம் எம்மை பகலிலும் இரவிலும் பின்தொடரும் வேறுபட்ட நிழல் போன்றது.
ஒருபோதும் அது எம்மை விட்டுப்பிரியாது.
விலகி வேறெங்கும் ஓடாது.
நாம் ஓடும் வேகத்தில் எம்மை துரத்தும். கௌவிப்பிடிக்கும்.

விதியில் எழுதப்பட்ட நேரத்தில் வந்து கௌவிச்செல்லும்.
மரணத்தை நினைத்து அச்சப்பட்டு கோழையாகாமல் எழுதப்பட்ட மரண விதியை எதிர்கொள்வோம்.
அழகான அமல்களில் ஆன்மா இன்பப்பரவசம் கண்டு மகிழும் பொழுதுகளில் மரணம் எம்மை சூழட்டும்.

இறைவா எம் வாழ்வின் அந்திம பொழுதை நல்லதாக்கிவிடு.
இறைவா எம் இறுதி அமலை நலலதாக்கிவிடு.
உன்னை நேருக்கு நேர் சந்திக்கும் நாளை சிறந்த நன்னாளாக ஆக்கிவிடு.

அந்த பாக்கியத்தினை எனக்கும் என்னைச்சார்ந்த,
சூழ்ந்த அனைவருக்கும் அருளிவிடு.

12/05/2020
Bisthamy






No articles in this category...